ரூ. 3 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ. 70,000 பணத்தை இழந்த பெண்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.3 கோடிக்கு ஆசைப்பட்ட பெண் ரூ.70,000 பணத்தை இழந்துள்ளார்.
தூத்துக்குடி செயின்ட் மெரீஸ் காலனியை சேர்ந்தவர் ராஜா. தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மர்ம நபர் பேசினார். அப்போது அந்த நபர் நான் பிரபல குளிர்பான நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் அதிர்ஷ்ட போட்டியில் உங்களது செல்போன் எண் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பாக எங்களது நிறுவன பிரதிநிதி தொடர்பு கொள்வார். அவரிடம் உங்களது ஆதார் சான்றுகளை சமர்ப்பித்து பரிசு தொகையை பெற்று கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதை தொடர்நது சங்கீதாவை தொடர்பு கொண்ட ஒரு நபர் தான் டெல்லியில் இருந்து குளிர்பான கம்பெனியிலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். ரூ.3 கோடிக்கான பரிசுத் தொகையை வெளிநாட்டில் இருந்து பெற ரூ.70,000 பரிவர்த்தனை கட்டணமாக கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய சங்கீதா போனில் தெரிவித்த வங்கி கிளைகளில் மூன்று தவணைகளாக ரூ.70 ஆயிரம் கட்டினார். ஆனால் பரிசு தொகை ரூ.3 கோடி வரவில்லை. இதன் பின் சங்கீதா, தன்னைத் தொடர்பு கொண்டவர்களின் எண்களைப் பிடித்து பேசிய போது அவை சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தன.
ரூ.3 கோடி பரிசு தொகை என ஆசை வார்த்தை கூறி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சங்கீதா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.