கணவர் கொடுமை: பெற்றோருக்கு வீடியோ அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை!
நீடாமங்கலம் அருகே கணவர் கொடுமை தாங்க முடியாத இளம்பெண் செல்போனில் மரணவாக்குமூலம் கொடுத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
திருவாரூர் : நீடாமங்கலம் அருகே கணவர் கொடுமைப்படுத்தியதால் அதை தாங்க முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இளம் பெண் கவுரி. மரணத்திற்கு முன்பு அவர் தனது பெற்றோருக்கு கண்ணீருடன் செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.
நீடாமங்கலம் அருகே உள்ள சிக்கப்பட்டு கிராமத்தில் வசிக்கும் முருகப்பன்-கவுரி தம்பதிக்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியை முருகப்பன் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் திருமணமான ஆறே மாதத்தில் தம்பதி இருவரும் பிரிந்த நிலையில், 1 வருட காலம் ஆனதால் விவாகரத்து கோரி உள்ளனர். தீர்ப்பு வரும் நிலையில் முருகப்பன், தனது மனைவியிடம், சேர்ந்து வாழ விரும்புவதாகவும், எனவே வழக்கை வாபஸ் பெறுமாறும் கூறி உள்ளார்.
அதற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்து, வழக்கை வாபஸ் பெற்றதும், மனைவியுடன் நீடாமங்கலத்தில் 3 மாதம் முருகப்பன் வாழ்ந்து வந்துள்ளார்.
வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, முருகப்பன் குடித்து விட்டு தினமும் அடித்துக் கொடுமைப்படுத்தியதால், மனமுடைந்த கவுரி, வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக தனது செல்போனில், கணவர் கொடுமைப்படுத்தியதால் உயிரை மாய்த்துக் கொள்வதாக, கவுரி வீடியோ பதிவு செய்துள்ளார். தனது குழந்தையை, பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டுமென அவர் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு கவுரியின் கணவர் முருகப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.