“குடிக்கத் தண்ணி குடுங்கய்யா”... சாதனை விளக்கக் கண்காட்சியில் ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை
கம்பம்: கம்பத்தில் அதிமுக ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனை விளக்கக் கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் பெண் ஒருவர், ‘குடி தண்ணீர்' கேட்டு கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி, கம்பத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் நடந்தது. இந்த கண்காட்சியை முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
அவருடன், ஆட்சியர் வெங்கடாச்சலம், நகராட்சி கமிஷனர் சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த, கம்பம் நகராட்சி 20வது வார்டைச் சேர்ந்த மேரி என்ற பெண், ஓ.பன்னீர்செல்வத்தை வழி மறித்தார். பின்னர் அவர் பன்னீர்செல்வத்திடம், "அய்யா... நான், 20வது வார்டில் வசிக்கிறேன். எங்கள் பகுதியில் கூலிக்காரர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். நாங்கள் காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவோம். இந்த சூழலில் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. இதனால் எங்களால் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை.
ஒரு உப்பு தண்ணீர் குழாய் போடச் சொல்லி கேட்டாலும், மறுத்து விடுகிறார்கள். நல்ல தண்ணீரும் இல்லை, உப்பு தண்ணீரும் இல்லை. வசதியானவர்களுக்கு மட்டுமே எல்லா வசதிகளும் கிடைக்கின்றன. எங்களுக்கு குடிக்கத் தண்ணீர் கூட கிடைப்பதில்லை" என அழுதபடி பேசினார்.
இதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், ‘இது குறித்து நகராட்சி கமிஷரிடம் கூற வேண்டியது தானே' எனக் கேட்டார். அதற்கு அங்கிருந்த நகராட்சி கமிஷனர் சந்திரா, ‘நாங்கள் தான் எல்லாம் செய்துள்ளோமே, நீங்கள் என்னிடம் வந்து சொல்ல வேண்டியது தானே' என்றார்.
இதைக் கேட்டு கோபமடைந்த மேரி, "உங்களிடம் வந்ததற்கு எம்.எல்.ஏ.,விடம் போங்கள், கவுன்சிலரிடம் போங்கள் என விரட்டினீர்கள். எனவே இந்த அய்யாகிட்ட சொன்னாத்தான் நடக்கும் என்பதால் சொல்ல வந்தேன்'' எனக் கூறி மீண்டும் அழ ஆரம்பித்தார்.
பின்னர், அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவங்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைக்க வந்த பன்னீர்செல்வம், ‘இது என்ன சோதனை' என சிறிது நேரம் திகைத்து நின்றார்.