அழகா இருக்கேன்.. தொந்தரவு ஜாஸ்தியா இருக்கு.. தூக்கமாத்திரை சாப்பிட்டு பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
உயரதிகாரிகளின் பாலியல் தொல்லை காரணமாக ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னை எழும்பூர் நரியங்காடு குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி, 27. இவர் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பாலமுருகன். கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்த நிலையில் இந்துமதி தனியாக வசித்து வந்தார்.
நேற்று அவர் தனது வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று இந்துமதியிடம் தற்கொலைக்கு முயன்றது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், நான் அழகாக இருப்பது தான் எனது பிரச்சினை. எனது அழகை உயர் அதிகாரிகள் வர்ணித்து தொல்லை தருகிறார்கள். இதனால் என்னால் வேலை பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கணவரை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் எனக்கு இது பெரிய சங்கடத்தை தருகிறது. பணி மாறுதல் கேட்டும் கிடைக்கவில்லை. என் அழகே எனக்கு ஆபத்தாக உள்ளது. எனவே பெரிய விபரீதம் ஏற்படும் முன்பாகவே என் வாழ்வை முடித்து கொள்ள நினைத்தேன் என்றும் கூறியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் இந்துமதி மீது தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் பலரும் உயரதிகாரிகளின் பாலியல் தொந்தரவு, பணியில் தொந்தரவு ஏற்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. உயரதிகாரிகளின் தொந்தரவுக்கு அஞ்சி பல பெண் காவலர்கள் தங்களின் பணி காலத்திலேயே வாழ்க்கையை முடிந்துக்கொண்டிருக்கின்றனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.