பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை
பொத்தேரி புறநகர் மின்சார ரயில்நிலையத்தில் இளம்பெண் கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
செங்கல்பட்டு: சென்னையை அடுத்த பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான பெண் யார் என்று ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை- செங்கல்பட்டு மார்க்கத்தில் பொத்தேரி புறநகர் மின்சார ரயில்நிலையம் உள்ளது. அதன் அருகே தண்டவாளத்தின் பக்கத்தில் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் கிடைத்த கூடுவாஞ்சேரி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பெண் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
பொத்தேரி ரயில்நிலையம் அமைந்துள்ள பகுதியில் பெரும்பாலும் தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் அதிகளவில் இருப்பதால் மாலை, இரவு நேரங்களில் ஆள்நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.
சமூக விரோதிகள் அந்தப்பெண்ணை பாலியல் கொடுமை செய்து கொன்றிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
இறந்த பெண்ணின் கழுத்தில் கத்திக்குத்து காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் இளம்பெண் சுவாதி கொடுரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே போல பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.