கணவருடன் சேர்ந்து வைக்க கோரிக்கை... விடிய விடிய வீட்டு வாசலில் தர்ணா நடத்திய புதுப்பெண்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திருமணமாகி 5 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்தி விட்டு சென்ற கணவருடன் சேர்த்து வைக்க கோரி புதுப்பெண் தனது கணவரின் வீட்டு வாசலில் விடிய விடிய தர்ணா செய்து வருகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே கழுகுமலையை சேர்ந்த முத்துபாண்டி மகள் மகாலெட்சுமி. முத்துபாண்டி 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகாலெட்சுமி அவரது தாய் பரமாரிப்பில் பிஎஸ்சி வரை படித்துள்ளார். கழுகுமலை அருகே உள்ள செந்தில்குமார் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமான பணியில் சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.
செந்தில்குமாரும், மகாலட்சுமியும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மத்துடன் இருவருக்கும் கடந்த மாதம் 13ம் தேதி திருணம் நடந்தது. திருமணமாகி முதல் 5 நாட்கள் இருவரும் மகாலெட்சுமி வீட்டில் தங்கியிருந்தனர். பின்னர் செந்தில்குமார் மனைவியை அங்கேயே விட்டு விட்டு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு அவரது வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் மகாலெட்சுமியை பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மகாலெட்சுமியின் தாய் மற்றும் உறவினர்கள் செந்தில்குமார் வீ்ட்டுக்கு சென்று விபரம் கேட்டபோது அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து வருவதாகவும் உங்கள் பெண்ணுடன் வாழ முடியாது என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மகாலெட்சுமியின் தாய் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஒரு வாரமாகியும் போலீசார் எந்த விட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மகாலெட்சுமி செந்தில்குமார் வீட்டுக்கு இரவு வந்து நியாயம் கேட்டார். இதனால் மாமியாரும், மாமனாரும் வீ்ட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தால் திகைக்க மகாலெட்சுமி விடிய விடிய கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.