கழுத்தை நெரித்து.. சுவரில் தலையை மோதிய செம்மர கடத்தல் கும்பல்.. பரிதாபமாக உயிரை விட்ட சாந்தி பிரியா
செம்மர கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் பலியானார்
திருப்பத்தூர்: செம்மரங்களை வெட்டிக் கடத்தி வந்த கும்பலுக்கும் புரோக்கருக்கும் நடந்த மோதலில் புரோக்கர் மனைவி சாந்திபிரியா உயிரிழந்தார். "சாந்திபிரியாவின் கழுத்தை நெரித்து சுவரில் தலையை முட்டி கொடூரமாகக் கொலை செய்துவிட்டனர்" என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
வாணியம்பாடி, ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், இவருக்கும் சாந்திப்பிரியா என்பவருக்கும் கல்யாணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 6 வயதில் கோமதி என்ற பெண் குழந்தை இருக்கிறாள். சீனிவாசனுக்கும், அசோகன் என்பவருக்கும் செம்மரம் வெட்டும் தொழிலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சீனிவாசனின் நண்பர் அசோகன்.. ஆந்திராவுக்குச் சென்று செம்மரம் வெட்டிக் கடத்தும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். செம்மரங்களை விற்றதில் கிடைத்த பணத்தை பங்கு பிரித்ததில் சீனிவாசனே அதிக பணத்தை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்திற்கு முன்னரும், 7 பேர் கொண்ட கும்பலுடன் அசோகன் செம்மரம் வெட்டிக் கடத்தி வருவதற்காக சென்றுள்ளார். ஆனால், செம்மரங்களை வெட்டிக் கடத்தி வந்த பிறகு பேசிய பணத்தை 7 பேருக்கும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார் சீனிவாசன். இதனால், இந்த கும்பல் சீனிவாசனிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
நூறு ரூபாய்க்காக உயிரை பணயம் வைத்த கூலித் தொழிலாளி.. தொடரும் சாக்கடை அவலம்.. புதுவையில் கொடுமை
கும்பலாக கணவனை தாக்குவதை கண்ட சீனிவாசனின் மனைவி சாந்திப்பிரியா குறுக்கே நுழைந்து சண்டையை தடுக்க பார்த்தார்.. ஆனால், அந்த கும்பல் நெருக்கி தள்ளியதில், அடிபட்டு அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்டவர்கரளை கைது செய்ய வலியுறுத்தினர். சாந்திபிரியாவின் கழுத்தை நெரித்து சுவரில் தலையை முட்டி கொடூரமாகக் கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர். இதனால், திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பின்னர் கிருஷ்ணமூர்த்தி, இளையராஜா, பழனி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதுடன், மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.மேலும் ஒடுகத்தூர் அருகே இந்தக் கும்பல் பதுக்கிவைத்திருந்த 900 கிலோ செம்மரக் கட்டைகளையும் போலீஸார் கைப்பற்றினர். கணவனின் தவறான செயலால், இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை தந்துள்ளது.