சுவாதி கொலை பீதி ஓயும் முன்பு சென்னையில் மற்றொரு சம்பவம்.. கொள்ளையன் விரட்டி பெண் சாவு
சென்னை: சென்னையில் பைக்கில் சென்ற பெண்களிடம் துணிகர வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டனர் கொள்ளையர்கள். அவர்களிடமிருந்து தப்பும் முயற்சியில் பைக்கில் இருந்து விழுந்த இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். பைக் மோதி ரோட்டில் சென்ற முதியவரும் உயிரிழந்தார்.
சென்னை, சாந்தோம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில், நேற்று இரவு 10.30 மணியளவில் பள்ளி ஆசிரியையான நந்தினி மற்றும் அவரது தோழி லட்சு என்ற காயத்திரி ஆகிய இருவரும் பணம் எடுத்துள்ளனர்.
பிறகு ஒரே பைக்கில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில், பைக்கில் வந்த கொள்ளையர்கள் இருவர் காயத்திரியின் கைப்பையை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நந்தினி கொள்ளை.. கொள்ளை.. என கத்தியபடியே பைக்கில் கொள்ளையர்கள் சென்ற பைக்கை விரட்டி சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த கொள்ளையர்களில் ஒருவரான கருணாகரன், நந்தினியின் பைக்கை காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய பைக், ரோட்டில் சென்ற சேகர் என்ற முதியவர் மீது மோதியது. இதில் அவர் பலியானார். இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பைக் மின் கம்பத்தில் மோதியது. இதில் நந்தினி பலியானார். காயத்திரி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தை பார்த்து கோபமடைந்த ஏரியாவாசிகள் வழிப்பறி கொள்ளையர்களில் கருணாகரனை மடக்கிப் பிடித்தனர். அவனை நைய புடைத்து, அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக்கை ரோட்டில் போட்டு தீ வைத்தனர்.
சீனிவாசபுரம் டாஸ்மாக் அருகே விபத்து நடந்ததால், அந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபோன்ற சம்பவங்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, சம்பவ இடத்தை சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
சுவாதி கொலை சம்பவத்தால் பெண்கள் பீதியில் இருந்து வெளிவருவதற்குள், சென்னையில் இப்படி ஒரு வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது.