நெல்லை அருகே மின்னல் தாக்கி பெண் பலி; சிறுமி உள்பட இருவர் காயம்
நெல்லை: நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிறுமி உள்பட இருவர் காயமடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சேரன்மகாதேவி, மேலச்செவல், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கல்லிடைக்குறிச்சி, விக்கிரவசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கயத்தாறு அருகே திருமால்புரத்தில் மின்னல் தாக்கியதில் லட்சுமி என்ற பெண் பலியாகினார். மின்னல் தாக்கியதில் சிறுமி உள்பட இருவர் காயமடைந்தனர். மேலும் கயத்தாரை அடுத்த ராஜா புதுக்குடி என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் 12 ஆடுகள் பலியாகின.