67 வயது பெண் டாக்டரின் வீட்டில் துணிகரம்.. வீடு புகுந்து 100 பவுன் நகை, ரூ. 1லட்சம் பணம் கொள்ளை!
சென்னை: சென்னை தாம்பரம் அருகே, தனியாக வசித்து வந்த பெண் டாக்டரின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 100 பவுன் நகைகள், ரூ. 1லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடர்கள் திருடிச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே உள்ளது சிட்லபாக்கம். இங்கு வசித்து வருபவர் டாக்டர் சாரதா. 67 வயதாகும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாக வசித்து வருகிறார். படப்பையில் இவரது கிளினிக் உள்ளது.
நேற்று மாலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு கிளினிக்கிற்குப் புறப்பட்டுச் சென்றார். இரவு பத்து மணியளவில் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடந்தது. பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே போய்ப் பார்த்தபோது பீரோ, லாக்கர் ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன. அதில் வைத்திருந்த 100 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பதை அறிந்தார் டாக்டர் சாரதா.
இதுகுறித்து சிட்லபாக்கம் போலீஸாருக்குத் தகவல் போனது. மோப்ப நாய் சகிதம் போலீஸார் விரைந்து வந்தனர். இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.