இறந்த மாணவியின் மார்க்சீட்டை பயன்படுத்தி டாக்டரான சென்னை பெண்... போட்டுக் கொடுத்த கணவர்!
செங்கல்பட்டு: இறந்து போன மாணவியின் பிளஸ்டூ மார்க் சீட்டை பயன்படுத்தி டாக்டரான சென்னை பெண் அர்ச்சனாவின் மருத்துவர் அங்கீகாரம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்தவர் அர்ச்சனா. எம்பிபிஎஸ் படித்த இவர் சென்னை குரோம்பேட்டையில் தமிழரசி என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்தார்.
மனைவி மீது புகார்
இந்நிலையில் அவரது கணவர் கார்த்திக், எனது மனைவி பிளஸ்டூ கூட தேர்ச்சி பெறாதவர். இறந்து போன தமிழரசி என்ற மாணவியின் பிளஸ்டூ மார்க் சீட்டை பயன்படுத்தி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து டாக்டராகி விட்டார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் செய்தார்.
மாமனாரும் புகார்
இதேபோல அர்ச்சனாவின் மாமனாரும் மருத்துவ கவுன்சிலில் புகார் தெரிவித்தார். இந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
புகாரில் உண்மை
இந்த விசாரணையில் அர்ச்சனா மீதான குற்றசாட்டுகளுக்கு உண்மை இருப்பதாக கூறி அவரது மருத்துவர் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
என்ன நடந்தது?
அதாவது செங்கல்பட்டை சேர்ந்தவர் தமிழரசி. 2003 ஆண்டில் இவர் இறந்து விட்டார். தமிழரசியின் பிளஸ்டூ படிப்பு சான்றிதழை வாங்கி, அர்ச்சனாவின் பெயரை தமிழரசி என்று குறிப்பிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் அவரது தந்தை ராமச்சந்திரன் படிக்க வைத்திருக்கிறார்.
போலீசில் புகார்
5 ஆண்டுகள் படித்து டாக்டரான அர்ச்சனா, தமிழரசி என்ற பெயரிலேயே கடந்த 3 ஆண்டாக சென்னை குரோம்பேட்டையி்ல் கிளினிக் நடத்தி வந்துள்ளார். தற்போது கணவர் காட்டிக் கொடுத்தததால் வசமாக சிக்கியுள்ளார். அர்ச்சனா மீது மருத்துவ கவுன்சில் சென்னை போலீசில் புகாரும் கொடுத்துள்ளது.