ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்தவருக்கு பிரசவ வலி.. பெண் குழந்தையுடன் வீடு திரும்பினார்!
தமிழகத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற வந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
விழுப்புரம்: தமிழகத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற வந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தமிழக அரசின் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், தமிழகத்தில் உள்ள சுமார் 1000 அரசு ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகத்தைச் சேர்ந்த ரோஸ் மேரி என்பவர் ஆசிரியர் தகுதிச் தேர்வு எழுதுவதற்காக இன்று காலை அவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிக்கு வந்தார்.
அப்போது பரீட்சை ஹாலுக்கு சென்ற அவருக்கு சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அதேபோல் விழுப்புரம் மாவட்டம், சின்னஎடையார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் திருமண கோலத்தில் வந்து தேர்வு எழுதினார்.