கள்ளக்காதலுக்கு இடையூறு.. மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. பரமக்குடியில் அதிர்ச்சி
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே கணவனின் கள்ளக்காதல் உறவை கண்டித்ததற்காக மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவர் கூலிவேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனை காரணம் காட்டி சிங்காரம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக ரஞ்சிதத்திடம் தெரிவித்த சிங்காரம், ரஞ்சிதத்தை வீட்டை விட்டு அடித்து விரட்டியுள்ளார். சிங்காரத்தின் கொடுமைகளை தாங்கி கொண்ட ரஞ்சிதம் அவருடனே இருந்துள்ளார். இதனிடையே கடந்த 4 ம் தேதி இரண்டாம் திருமணம் செய்த பெண்ணை விரட்டி விட்டதாகவும், நாம் இருவரும் இனி பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் என சிங்காரம் கூறியுள்ளார். இதனை நம்பிய ரஞ்சிதம் சிங்காரத்துடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி தன்னுடைய மனைவியை நகைக்காக யாரோ கொலை செய்து விட்டதாக கிராம மக்களிடம் சிங்காரம் தெரிவித்துள்ளார். மேலும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது.
கள்ளக்காதலுக்கு ரஞ்சிதம் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கட்டையால் அடித்து சிங்காரம் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கட்டையால் அடித்தும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்ததை சிங்காரம் ஒப்புக்கொண்டார். மக்களை நம்ப வைப்பதற்காக நகைக்காக கொலை நடந்ததுபோல் நடித்ததாக தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.