குடும்ப தகராறு: 2 குழந்தைகளை குளத்தில் வீசி, பெண் தற்கொலை
மதுரை: நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் தகராறு செய்த காரணத்தால் 2 குழந்தைகளையும் குளத்தில் வீசி மூழ்கடித்துக் கொன்றுவிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பங்குன்றத்தை அடுத்துள்ள ஜே.ஜ. நகரை சேர்ந்தவர் பன்னீர் (40). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி மகுடேஸ்வரி (35). இவர்களது மகள்கள் ஹரிணி (8) அமிர்தவர்ஷிணி (2). பன்னீருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்டதால், மகுடேஸ்வரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மகுடேஸ்வரிக்குக்கும் இது 2வது திருமணமாகும்.
பன்னீருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதன்பின் பன்னீர் வெளியே சென்றுவிட்டார்.
கணவரின் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்த மகுடேஸ்வரி இரவு 10 மணிக்கு மேல் குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியே சென்றார்.
பின் இரு குழந்தைகளையும் பானாங்குளம் கண்மாயில் வீசி கொன்று விட்டு, தானும் கண்மாயில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.இன்று காலை மகுடேஸ்வரி, அமிர்தவர்ஷினியின் உடல் மிதந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் மீட்டனர். 3 மணிநேரம் போராடி ஹரினியின் உடலை கண்டுபிடித்தனர். இதனையடுத்து மூவரின் உடலையும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
குடும்ப தகராறில் 2 குழந்தைகளை தண்ணீரில் வீசி கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பன்னீரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.