குடிக்காதே என்று கண்டித்த மனைவி... எரித்துக்கொன்ற கணவன் - சென்னையில் பயங்கரம்
குடிப்பதை கண்டித்த மனைவியை தீ வைத்து எரித்துக்கொலை செய்த கணவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை: மேடவாக்கம் அருகே குடிப்பதை கண்டித்த மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்றுள்ளான் குடிகார கணவன். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேடவாக்கம் ராம்தாஸ் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குடிபோதையில் தகராறு
போதைக்கு அடிமையான ராஜேஸ் வேலைக்குச் செல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார்.
இதனால் ராஜேஷ்க்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் இடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கணவன் மனைவி சண்டை
இந்நிலையில் நேற்று இரவும் அவர்களுக்குள் சண்டை வரவே, கோபப்பட்ட சந்தியா கணவர் ராஜேஷிடம் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் கணவர் ராஜேஷ் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு
சண்டை முற்றவே கணவர் ராஜேஷ் மனைவியை சந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும் கடும் கோபத்தில் இருந்த ராஜேஷ், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தியா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில், சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை
மனைவி மீது தீ வைத்தபோது, ராஜேஷ் மீதும் தீப்பற்றவே படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு காயமடைந்த அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.