கணவர் மரணம்: 2 பச்சிளம் குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை சக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சங்கீத் குமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 24). இவர்களுக்கு கீர்த்தி மாலினி (4), மதுமிதா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். சங்கீத்குமார் கடந்த 2 மாதங் களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையொட்டி அவர் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் சில நாட்களும், பெற்றோர் வீட்டில் சில நாட்களுமாக இருந்து வந்துள்ளார். கணவர் இறந்த துக்கத்தால் காளீஸ்வரி யாருடனும் சரியாகப் பேசாமல் சோகத்துடன் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காளீஸ்வரி நேற்று மாலையில் 2 குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் அவரும் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரமாக வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வடமதுரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா சம்பவ இடத்துக்கு வந்து காளீஸ்வரி மற்றும் அவரது குழந்தைகள் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் காளீஸ்வரி வீட்டில் இருந்த ஒரு கடிதத்தையும் கைப்பற்றினார்.
அந்த கடிதத்தில் என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடமதுரை சுற்றுவட்டாரா கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.