ஏடிஎஸ்பியின் வெறித்தனமான அறையால்.. காது கேட்கும் திறனை இழந்தார் திருப்பூர் பெண்!
மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கன்னத்தில் அறைந்தார். இதனால் அந்த பெண்ணுக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.
அதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
போலீஸ் தாக்குதல்
போலீஸ் அதிகாரி தாக்கிய அந்தப் பெண் ஐயம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பது பின்னர் தெரியவந்தது. போலீசாரின் தாக்குதலுக்கு பின்னர் அவர் கோவை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
கேட்கும் திறன் பாதிப்பு
அங்கு அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கண்டனம்
இந்நிலையில், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணி நீக்கம் செய்
டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரத்தில் மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.