ஓடும் ஆட்டோவில் தகாத வார்த்தை பேசி பெண்ணிடம் வாலாட்டிய வேலப்பன்... கைது
சுசீந்திரம்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஓடும் ஆட்டோவில் இளம் பெண்ணிடம் தகாத வார்த்தைகளைப் பேசி வாலாட்டி சில்மிஷம் செய்த டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சுசீந்திரத்தை அடுத்த குலசேகரன்புதூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று மாலை வெள்ளமடம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இதற்காக குலசேகரன் புதூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது மாலை மயங்கி இரவு தொடங்கிய நேரம். சாலையில் இருட்டாக இருந்தது.
அந்த நேரத்தில் குலசேகரன்புதூர் பகுதியில் ஆட்டோ ஓட்டும் வேலப்பன் என்பவர் ஆட்டோவில் அந்த வழியாக வந்தார். இளம்பெண்ணை பார்த்ததும் அவர், ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அந்த பெண்ணை தன்னுடைய ஆட்டோவில் வரும்படி அழைத்துள்ளார். அவரும் தெரிந்தவர்தானே என்று எண்ணி, ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ குலசேகரன்புதூர் ஊரை நோக்கி சென்றது.
அப்போது திடீரென அது வழி மாறி இருட்டான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், ஏன் இங்கே செல்கிறீர்கள் என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்டார். அதற்கு அவர், பெண்ணை தகாத வார்த்தை பேசியதோடு அவரை மானபங்கம் செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பீதி அடைந்த அந்த பெண் ஆட்டோவில் இருந்து உதவி கேட்டு அலறினார்.
அவரது சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஆட்டோவை துரத்த தொடங்கினர். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையால் ஆட்டோவின் வேகம் குறைந்ததும் அந்த பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து வெளியே குதித்தார். அதற்குள் ஆட்டோவை விரட்டி வந்த பொதுமக்கள் அதனை மடக்கிப் பிடித்தனர். ஆட்டோ டிரைவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து உடனடியாக சுசீந்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ராஜபால், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் ஆட்டோ டிரைவர் வேலப்பன் தன்னை மானபங்கம் செய்ததாக அந்த பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆட்டோ டிரைவர் மீது பெண்கள் வன்கொடுமை, மானபங்கம் செய்ததால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலப்பனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது