நெல்லை: ஊராட்சிமன்ற தலைவி மீது தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி
நெல்லை: செங்கோட்டை அருகே அதிமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ளது பெரியபிள்ளை வலசை கிராமம் இங்கு தலைவராக இருப்பவர் அதிமுகவை சார்ந்த முத்து லக்ஷ்மி இந்த ஊராட்சிக்கு கடந்த 2003ஆம் ஆண்டில் 65இலட்சம் ரூபாய் மதிப்பில் 10 படுக்கைகளோடு கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முதல்வர் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதற்கான இடம் இந்த ஊராட்சிக்கு சொந்தமாக பெரியபிள்ளை வலசை கிராமத்தில் புதுக்காலனி என்ற பகுதியில் உள்ள 46 சென்ட் நிலத்தில் கடந்த இருதினங்களுக்கு முன்பு மாவட்ட அதிகாரிகள் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு இடம் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த பகுதியில் தலைவர் முத்து லட்சுமி சென்றபோது இந்த நிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சார்ந்த சிலர் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர்.தாக்குதலில் காயம் அடைந்த அவர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை தேடி வருகின்றனர். அதிமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.