தாராபுரம் காவல்நிலையத்தில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மகளிர் நிலையத்தில் பெண் போலீஸ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் காயத்ரி. இவரை, உயர் அதிகாரி ஒருவர் திட்டிய காரணத்தால் மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
காவல் நிலையத்தில் விஷம் அருந்திய காயத்ரி, வாயில் நுரை தள்ளியவாறு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை தாராபுரம் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயரதிகாரி திட்டிய காரணத்தினாலேயே பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக காவல்நிலையத்தில் பெண் காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திருச்செங்கோடு காவல்நிலைய பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கும் உயரதிகாரி செய்த டார்ச்சரே காரணம் என்று கூறப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.