கள்ளக்காதல் விபரீதம்-புகார் கொடுத்த பெண்ணின் கணவரை திருட்டு கல்யாணம் செய்த ஏட்டம்மா அதிரடி சஸ்பெண்ட்
அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே இன்னொரு பெண்ணின் கணவரை சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த பெண் போலீஸ்காரர் ராதிகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர்: புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவர் மீது மோகம் கொண்டு கள்ளக்காதலில் மூழ்கி அவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மனைவி லதா (36). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்தத் தம்பதியின் வாழ்க்கை இப்போது சின்னாபின்னமாகி விட்டது. காரணம், ஒரு கள்ளக்காதல்.
இத்தனைக்கும் செல்வக்குமாரும், லதாவும் காதலித்து மணம் புரிந்தவர்கள். உறவினர்களும் கூட. 2000மாவது ஆண்டு திருமணம் நடந்தது. எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவர் என்றைக்கு சிங்கப்பூருக்கு டிரைவர் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்க ஆரம்பித்தாரோ அப்போதே பல சேட்டைகளும் அவரை சூழ ஆரம்பித்தன.
வருடத்திற்கு சில முறை ஊருக்கு வருவார் செல்வக்குமார். அப்போது அவருக்கு அந்த ஊரைச் சேர்ந்த 5 பெண்களுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த லதா அதிர்ச்சி அடைந்தார். கணவரைக் கண்டித்தார். அதன் பின்னர் சிங்கப்பூர் போய் விட்ட செல்வக்குமார், போனில் தொடர்ந்து லதாவுடன் சண்டை பிடித்து வந்தார். அவரது நடத்தையையும் விமர்சித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லதா, இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்தார். புகாரை விசாரிப்பதாக கூறிய பெண் போலீஸ்காரர் ராதிகா, செல்வக்குமாருடன் தொடர்பு கொண்டு போனில் பேசியுள்ளார். அப்போது செல்வக்குமாரின் பேச்சில் மயங்கிய ராதிகா, அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டார். மணிக்கணக்கில் இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர்.
ராதிகா கணவரை விட்டுப் பிரிந்து வாழ்கிறார். செல்வக்குமாரை அவருக்குப் பிடித்து விட்டதால் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். செல்வக்குமாரும் அதற்கு சம்மதம் கொடுத்தார். இந்த நிலையில், லதாவுக்கு இந்த விவகாரம் தெரிய வந்தது. வாட்ஸ் ஆப் மூலமாக அவர் தனது கணவருடன் பேசியதையும் அறிந்தார் லதா.
இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி போல மார்பிங் செய்த படத்தையும் ராதிகா வாட்ஸ் ஆப்பில் வலம் வரச் செய்தார். இதுவும் ஊருக்குள் புயலைக் கிளப்பியது. இந்த நிலையில்தான் ஊர் திரும்பிய செல்வக்குமார் அதிரடியாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணப் படத்தையும் அவர்களே வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த லதா, போலீஸில் புகார் கொடுக்க செல்வக்குமார் கைதானார். ராதிகா தப்பி விட்டார்.
தற்போது ராதிகா மீது துறை ரீதியான விசாரணைக்கு மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.