நகை, பணத்தை 'ரிட்டர்ன்' வாங்க... கள்ளக்காதலனை தேடி கணவனுடன் வந்த பெண்!!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை அடுத்த வெண்டலிகோட்டையை சேர்ந்தவர் ரெதீஷ் (27). பெயிண்டிங் தொழிலாளி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அங்கு பழக்கமான நண்பரின் உறவுக்காரர் ஒருவரின், 2வது மனைவியுடன் ரெதீசுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்திருக்க முடியாமல் தவித்தனர். இதனால் கணவனைவிட்டு பிரிந்து வந்து ரெதீசை அப்பெண் திருமணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண்ணின் நகை, பணத்தை வைத்து உல்லாசமாக ஊர்சுற்றியுள்ளார் ரெதீஷ். 'ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள்' என்பார்களே அதுபோல சில மாதங்களிலேயே ரெதீசுக்கு அப்பெண்ணுடன் வாழ கசந்தது.
திடீரென ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல், தனது சொந்த ஊருக்கு 'எஸ்கேப்' ஆகிவிட்டார் ரெதீஷ். அவரது தொலைபேசிக்கு நாகப்பட்டினம் பெண் தொடர்புகொண்டாலும் ரெதீஷ் பேசுவதில்லையாம். ரெதீஷ் கழற்றிவிட்டு ஓடிவிட்டார் என்பதை உணர்ந்த அந்த பெண், தனது கணவனிடமே, சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த கணவனும், மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.
அதே நேரம் கள்ளக்காதலன் செலவிட்ட நகை, பணத்தை திரும்ப பெற வேண்டும் என்று அப்பெண் தனது கணவனிடம் வலியுறுத்தியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட கணவனும், கள்ளக்காதலனை தேடி பிடிக்க சம்மதித்தார். இதையடுத்து குலசேகரம் வந்த தம்பதிகள், கள்ளக்காதலனின் புகைப்படத்தை பலரிடமும் காண்பித்து, ரெதீஷின் வீட்டை கண்டுபிடித்தனர்.
ரெதீஷின் வீட்டுக்கு சென்ற தம்பதிகள், பணம், நகையை கேட்டு தகராறு செய்துள்ளனர். சண்டை முற்றி கைகலப்பு வரை சென்றதால், அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். குலசேகரம் போலீசார் விரைந்து வந்து காவல் நிலையம் அழைத்து சென்று இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், கள்ளக்காதலியிடம் இருந்து வாங்கிய நகையை ஒரு வாரத்தில் திருப்பி கொடுப்பதாகவும், பணத்தில் ரூ.50 ஆயிரத்தை உடனடியாக தருவதாகவும் ரெதீஷ் உறுதியளித்தார். கள்ளக்காதலனை தேடி கணவனுடன், பெண் வந்த சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.