கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த கள்ளக்காதலர்களிடையே சண்டை.. கத்திக் குத்து!
திருப்பூர்: திருப்பூரில் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த கள்ளக்காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோபமமடைந்த இளைஞர் அப்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தினார்.
திருப்பூர் கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பெயர் தீபலட்சுமி. 30 வயதாகும் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் வேலுடன் சண்டை போட்டு விட்டு அவரை பிரிந்து தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அங்கு வேலை பார்த்து வரும் 26 வயதான முத்துக்கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் ஒரே வீட்டில் வாழவும் தொடங்கினர். இந்த நிலையில் தீபலட்சுமிக்கு இந்தப் புதிய உறவு கசந்துள்ளது. இதனால் முத்துக்கிருஷ்ணனை வீட்டை விட்டு அனுப்பி விட்டார். அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் தீபலட்சுமியிடம் பேச முயற்சித்தார் முத்துக்கிருஷ்ணன். ஆனால் வீட்டுப் பக்கம் கூட வரக் கூடாது என்று அவரை கடுமையாக கண்டித்துள்ளார் தீபலட்சுமி.
இதனால் கோபமடைந்தார் முத்துகிருஷ்ணன். நேற்று இரவு தீபலட்சுமி வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து அவரிடம் சண்டை பிடித்தார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அதில் முத்துக்கிருஷ்ணன், கத்தியை எடுத்து தீபலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயமடைந்து விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துக்கிருஷ்ணனைத் தேடி வருகின்றனர்.