பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் வரதட்சணை கேட்ட ஆசிரியர்.. கல்யாணம் நின்னு போச்சு!
நாளை நடக்கவிருந்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
திருச்சி: கொஞ்சம் காலமாக ஓய்ந்திருந்த இந்த வரதட்சணை பிரச்சனை இப்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. அரசு ஊழியர் அதிலும் ஆசிரியர் ஒருவரே பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் வரதட்சணை கேட்டு இந்த விவகாரத்தில் சிக்கி கொண்டுள்ளார்.
துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சூரியகலா. இவருக்கும் மணப்பாறை அருகே சாம்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கறார் கண்டிஷன்
நாளை இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில், அருண்குமார், சூரியகலாவிடம் தனக்கு 15 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால்தான் திருமணம் என்று கண்டிஷன் போட்டுள்ளார். அப்படி வரதட்சணை கொடுக்காவிட்டால், கல்யாணத்தை நிறுத்தி விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
ஆசிரியர் மிரட்டல்
நாளை கல்யாணத்தை வைத்துக் கொண்டு இப்படி மிரட்டல் விடுத்ததை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் சூரியகலா, அருண்குமாரின் தாய் மல்லிகா, மாமா கிருஷ்ணன், சகோதரி ஜெயபிரபாவிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் அருண்குமார் கேட்டதைவிட இன்னும் அதிகமான வரதட்சணையை கேட்டிருக்கிறார்கள். அதனால் திருமணம் நின்றுவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் சூரியகலா 3 லட்சம் ரூபாய் அவர்களிடம் தந்தார். ஆனாலும் மொத்தமாக 15 லட்ச ரூபாயையும் உடனே தர வேண்டும் என்று அருண்குமார் குடும்பத்தினர் கறாராக சொல்லிவிட்டனர்.
விசாரணை ஆரம்பம்
இதற்கு மேல் செய்வதறியாத சூரியகலா, அருண்குமார் குடும்பத்தை பற்றி மணப்பாறை மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், அருண்குமார், மல்லிகா, கிருஷ்ணன், ஜெயபிரபா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இதில் வரதட்சணை கேட்ட அருண்குமார் குடும்பத்தினர் சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்துள்ளனர்.
திருமணம் நிறுத்தம்
ஓய்ந்திருந்த வரதட்சணை பிரச்சனை தற்போது மீண்டும் தமிழகத்தில் நடமாட துவங்கியுள்ளது. நாளை திருமணம் என்பதால் வேறு வழி இல்லாமல் வரதட்சணையை பெண் வீட்டார் கொடுத்துவிடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்ட ஆசிரியர் தற்போது கம்பி எண்ண உள்ளார். ஆனாலும் நாளை நடக்கவிருந்த திருமணம் வரதட்சணையால் தடைபட்டது பெண் சப்-இன்ஸ்பெக்டர் தரப்பு உட்பட அந்த மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.