ஆரணியில் சங்கிலிப் பறிப்புக் கொள்ளையர்களிடம் சிக்கி ஆசிரியை படுகாயம்
ஆரணி: திரவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியை கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை திருடர்கள் பறித்தபோது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
ஆரணியைச் சேர்ந்தவர் சொர்ணலதா. இவர் ஆசிரியையாக இருக்கிறார். இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் அவர் போய்க் கொண்டிருந்தபோது பின்னால் வந்த இரு கொள்ளையர்கள், சொர்ணலதாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனர். இதில் நிலை தடுமாறி சொர்ணலதா கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்தார்.
கொள்ளையர்கள் இருவரும் பைக்கில் தப்பிச் சென்று விட்டனர். அக்கம் பக்கத்தினர் சொர்ணலதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் திருடர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் இப்படித்தான் ஜெயந்தி என்ற ஆசிரியை குடிகார திருடன் ஜெயந்தியின் கைப்பையைப் பறிக்க முயன்றபோது பரிதாபமாக விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார், இன்னொருவரும் அந்த சம்பவத்தில் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல வேலூர் அருகே ஒரு பெண் போலீஸ்காரரும் இதேபோல கொள்ளையர்களிடம் சிக்கி நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்து பின்னர் மரணமடைந்தார்.