ஜாமீனில் விடுதலையாக துடிக்கும் ஆடி கார் ஐஸ்வர்யா... ஹைகோர்ட்டிலும் மனுத் தாக்கல்
சென்னை: மதுபோதையில் காரை ஓட்டி கூலித் தொழிலாளி முனுசாமியின் உயிரிழப்புக்குக் காரணமான 'ஆடி கார்' ஐஸ்வர்யா விடாது முயற்சியாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த ஐஸ்வர்யா வில்டன், கடந்த ஜூலை 1-ந் பழைய மகாபலிபுரம் சாலையில் கார் ஓட்டிச் சென்றபோது கூலித் தொழிலாளி முனுசாமி மீது மோதியது. இதில் முனுசாமி இறந்தார்.
ஐஸ்வர்யா மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா தொடர்ந்து ஜாமீனில் விடுதலையாக முயற்சித்து வருகிறார்.
ஐஸ்வர்யா சார்பில் 2-வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்தது. மருத்துவப் பரிசோதனையில் ஐஸ்வர்யா மது அருந்தியுள்ளது உறுதியாகி இருப்பதாகக் கூறி அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார் ஐஸ்வர்யா. சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் அளிக்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும்.