முகத்தை மூடி, பூரிக்கட்டையால் அடித்து, அரிவாளால் வெட்டி.. என்னா ஒரு வெறி இந்த மனைவிக்கு!
தாராபுரம்: தாராபுரத்தில் குடித்து விட்டு சண்டை போட்டு வந்த கணவரை, ‘ஆசை' பட ஸ்டைலில் கொலை செய்ய மனைவி முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம்ரோடு காந்திபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (35) ஜே.சி.பி. ஆபரேட்டர். இவரது மனைவி வஞ்சியம்மாள் (30), மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நந்தினி, வாணி என 2 மகள்கள் உள்ளனர்.
கண்ணனுக்கு தன் மனைவி வேலைக்குப் போவதில் விருப்பமில்லை. வீட்டில் இருந்தபடி தனது குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுமாறு அவர் கூறி வந்துள்ளார். ஆனால், அதனை வஞ்சியம்மாள் ஏற்கவில்லை. இதனால், இருவருக்குள்ளும் மனஸ்தாபம் இருந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த கண்ணன், இது தொடர்பாக மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் அப்படியே தூங்கி விட்டார். ஆனால், கணவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த மனைவி வஞ்சியம்மாள், அவரைக் கொல்ல திட்டமிட்டார்.
அதன்படி, நள்ளிரவில் எழுந்த வஞ்சியம்மாள், பிரகாஷ் ராஜ் நடித்த ஆசை படத்தில் வரும் காட்சியை போல, கணவரின் கை, கால்களை கட்டினார். பின்னர் கண்ணனின் தலைப்பகுதி முழுவதையும் பிளாஸ்டிக் கவர் போட்டு மூடினார். திடீரென மூச்சுத் திணறல் ஏற்படவே திடுக்கிட்டு எழுந்தார் கண்ணன்.
இதைப் பார்த்த வஞ்சியம்மாள், தயாராக வைத்திருந்த பூரிக்கட்டையால் கண்ணனின் முகத்தில் பலமாகத் தாக்கினார். ஆனால் பூரிக்கட்டை இரண்டாக உடைந்தது. இதை எதிர்பாராத அவர் ஆத்திரம் தீராமல் வீட்டில் இருந்த அரிவாளால் கணவனை வெட்டியுள்ளார். கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே, வஞ்சியம்மாள் போலீசில் சரண் அடைந்தார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘குடித்து விட்டு வந்து தினமும் தொல்லை கொடுத்ததால் அரிவாளால் வெட்டியதாக' தெரிவித்துள்ளார். இதையடுத்து வஞ்சியம்மாளை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.