"கரகாட்டக்காரன்" ஸ்டைலில் தனியாக ஓடிய பஸ் சக்கரம்... டீக்கடையில் நின்ற பெண் காயம்!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இருந்து சிவகாசிக்கு சென்ற அரசு பஸ்சில் திடீரென சக்கரம் கழன்று தனியாக ஓடி டீக்கடையில் நின்ற பெண் மீது மோதியதில் அவரது கால் முறிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பணிமனையிலிருந்து சிவகாசி, சங்கரன்கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று காலை 11.30 மணியளவில் இந்த பஸ் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திலிருந்து சிவகாசிக்கு புறப்பட்டது.
50க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர். பஸ்சை மதுரை மாவட்டம் அத்திப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் பிரதாப் சந்திரன் ஓட்டினார். பஸ் நிலையத்திலிருந்து மெயின்ரோட்டுக்கு வந்து திருவேங்கடம் சாலையில் பஸ் திரும்பியபோது திடீரென்று முன்பக்க டயர் வீலுடன் கழன்று ரோட்டில் ஓடியது.
இதைப்பார்த்த பயணிகள் அலறினர். சாலையில் நடந்து சென்றவர்களும் பதறியடித்து விலகினர். அங்கு சாலையோரம் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த ஒரு பெண் மீது சக்கரம் மோதியதில் அவரது கால் முறிந்தது. அவரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில் அவர் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கீழப்புதூரைச் சேர்ந்த துரைச்சி என்றும், குடும்ப பிரச்னை தொடர்பாக சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது பஸ் சக்கரம் மோதி படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று வழியில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. அரசு பஸ்கள் சரிவர பராமரிக்காமல் இயக்கப்படுவதே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.