நிர்மலா தேவியுடன் ஒன்றாக தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை.. சிபிசிஐடி சம்மன்
நிர்மலா தேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளனர்.
Recommended Video
விருதுநகர்: பேராசிரியை நிர்மலா தேவியுடன் மதுரை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த தூத்துக்குடி தனியார் கல்லூரி பேராசிரியையிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசி, தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
5 நாள் சிபிசிஐடி விசாரணை முடிவடையவுள்ள நிலையில் இன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுதொடர்பாக உதவிப் பேராசிரியர் முருகனிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்மலாதேவியுடன் தொடர்புடைய அனைவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நிர்மலா தேவியுடன் தங்கி இருந்த தூத்துக்குடி தனியார் கல்லூரி பேராசிரியை ஜெசிந்தா தமிழ்மலரை விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான, விசாரணைக்கு ஆஜராகுமாறு உதவிப் பேராசிரியை ஜெசிந்தா தமிழ் மலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் நிர்மலாதேவியின் தொடர்பு குறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது