பெண் போலீஸிடம் சில்மிஷம் செய்த காவல் துறை அதிகாரி... நடவடிக்கை கோரி மாதர் சங்கம் மனு
கோவையில் பெண் போலீஸிடம் தவறாக நடந்து கொண்ட உதவி ஆணையர் ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை ஆணையரிடம் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கோவை: நீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது கூட்டத்தில் சிக்கிய பெண் எஸ்.ஐ.யை மீட்கிறேன் என்ற பெயரில் அவரிடம் தவறாக நடந்து கொண்ட காவல் துறை உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக கோவையில் நடந்த ஒரு போராட்டத்தில் மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். அப்போது அந்த கூட்டத்தில் பெண் எஸ்.ஐ. ஒருவர் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கிறேன் என்று உதவி ஆணையர் ஜெயராமன் கூட்டத்திற்குள் புகுந்தார்.
தகாத முறையில் ....
அப்போது பொது இடம் என்றும் பாராமல் அந்த பெண்ணிடம் வக்கிரமாக ஜெயராமன் நடந்து கொண்டார். அந்த பெண் எஸ்.ஐ. கையை தள்ளிவிட்ட போதிலும் அவர் இதேபோல் தொடர்ந்து அத்துமீறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகியது.
மனு அளிப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாதர் சங்கத்தினர் பொது இடத்தில் தவறாக நடந்து கொண்ட உதவி ஆணையர் ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை ஆணையரிடம் மனு அளித்தனர்.
கண்டிக்கத்தக்கது
இதைத் தொடர்ந்து மாதர் சங்க தலைவி ராதிகா பேசுகையில், பொது இடத்தில் பத்திரிகையாளர்கள், மாணவர்கள் இருக்கிறார்கள் என்று கொஞ்சமும் அச்சமின்றி பெண் போலீஸிடம் தகாத முறையில் ஜெயராமன் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
காவல் நிலையத்தில்...
பொது இடத்திலேயே பெண் காவலருக்கு பாதுகாப்பு இல்லை என்றால், காவல் நிலையத்தில் இவர்களின் நிலை எப்படி இருக்கும் என்ற அச்சம் எழுகிறது. எனவே காவல் ஆணையர், மோசமாக நடந்து கொண்ட உதவி ஆணையர் ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.