எஸ்.வி சேகரை உடனடியாகக் கைது செய்யக்கோரி சென்னையில் மாதர் சங்கம் போராட்டம்
எஸ்.வி சேகரை உடனடியாகக் கைது செய்யக்கோரி மாதர் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடந்தது.
சென்னை : பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பிய எஸ்.வி சேகரைக் கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்து இருந்தார். இதனால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைக்கால முன் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
இதனால், போலீஸாரின் எஸ்.வி சேகரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.வி சேகரைக் கைது செய்யக்கோரி சென்னை மயிலாப்பூரில் அனைத்து இந்திய மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு எஸ்.வி சேகருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். அப்போது சட்டத்துக்கு புறம்பாக நடக்கும் எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. எஸ்.வி சேகரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறி இவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.