கந்துவட்டி: திருவண்ணாமலையில் பெண் தற்கொலை முயற்சி
கந்துவட்டி காரணமாக திருவண்ணாமலையில் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
திருவண்ணாமலை : கந்துவட்டிக்கொடுமை காரணமாக திருவண்ணாமலையில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் இசக்கிமுத்து என்பவர் குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் அவர் உட்பட நான்கு பேர் இறந்தனர்.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் மகாலட்சுமி என்பவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் வீட்டை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கந்துவட்டி கொடுமை காரணமாகவே தற்கொலைக்கு மகாலட்சுமி முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மகாலட்சுமி தனது வீட்டிற்கு அருகே உள்ள கோவிந்தம்மாள், செல்வி ஆகிய இருவரிடமும் தொழில் செய்ய வட்டிக்குப் பணம் வாங்கி உள்ளார். இரண்டு வருடமாக கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப செலுத்தி அந்தக் கடனை முடித்து உள்ளார்.
இருந்தும் மேலும் பணம் தரவேண்டும் என்றும் கோவிந்தம்மாள் சில நாட்களாக அவரை மிரட்டி வந்துள்ளார். இன்றும் அதுபோல அடியாட்களைக் கொண்டு, வீட்டில் உள்ள பொருள்களைச் சேதப்படுத்தி மகாலட்சுமியை மிரட்டி உள்ளார்.
இதனால் மனமுடைந்த மகாலட்சுமி தற்கொலைக்கு முயன்றார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.