திருப்பூர் அருகே இளம்பெண் அடித்துக் கொலை... 3வது கணவனுக்கு போலீஸ் வலை
திருப்பூர்: கழுத்தை நெரித்து இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவான மூன்றாவது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர் பூமிநாதன். இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிமேகலை என்பவரும், திருப்பூர் அருகே உள்ள கஞ்சம்பாளையம் இராதா நகரில் சமீபத்தில் குடியேறினர். அப்போது பூமிநாதன் திருப்பூரிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், டிரைவராக உள்ளதாகவும், மணிமேகலை தனது மனைவி என்றும் வீட்டு உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும், பூமிநாதன் வீட்டு கதவு திறக்கப்படாததையடுத்து, அருகிலிருந்தவர்கள் சந்தேகத்துடன் கதவை திறந்து பார்த்த போது, மணிமேகலை ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார்.. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் உதவி ஆணையாளர் தங்கவேல் தலைமையிலான போலீசார் மணிமேகலையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மணிமேகலைக்கு ஏற்கனவே கார்த்திக், குமார் என இரு கணவர்கள் இருந்துள்ளனர். காணாமல் போன மூன்றாவது கணவர் பூமிநாதனை தேடி வருகிறோம். கொலை செய்யப்பட்ட மணிமேகலைக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் யாருடைய குழந்தைகள் என்பது குறித்து தகவல் இல்லை. பூமிநாதன் பிடிபட்ட பின்னரே அவர்களைப்பற்றிய முழு விவரம் தெரிய வரும் என்றனர்.