இந்தியாவின் எல்லைகளைக் "காக்கும்" 4 பெண் "காவல் தெய்வங்கள்"!
சென்னை: இந்தியாவின் நான்கு எல்லைகளிலும் பெண்கள் முதல்வர்களாக இருக்கும் அதிசயத்தை நாடு பார்த்து வருகிறது.
தென் எல்லையில் ஜெயலலிதாவும், வட எல்லையில் ஜம்மு காஷ்மீர் முதல்வராக மஹபூபா முப்தியும், கிழக்கு எல்லையில் மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியும், மேற்கில் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலும் ஆட்சி செய்து வருகின்றனர்.
இதற்கு முன்பு இப்படி நான்கு திசைகளிலும் பெண் முதல்வர்கள் இருந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக பெண் முதல்வர்களை நாடு பார்த்துள்ளது.
மஹபூபா முப்தி..
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் மஹபூபா முப்தி. இவரது தந்தை முப்தி முகம்மது சயீத்தின் மறைவைத் தொடர்ந்து இவர் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். 1959ம் ஆண்டு பிறந்தவரான மஹபூபா, தனது தந்தையிடம் அரசியல் கற்று மக்கள் ஜனநாயகக் கட்சியில் செயல்பட்டு வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மமதா பானர்ஜி..
சிறு வயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்டவரான மமதா பானர்ஜி எளிமைக்குப் பெயர் போனவர். உறுதியான கொள்கையுடன் செயல்படக் கூடியவர். எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர். சாதாரண மக்களம் எளிதாக காணக் கூடிய வகையில் அடக்கமானவர். சட்டம் படித்தவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலுக்கு வந்தவர். 2002ல் திரினமூல் காங்கிரஸை உருவாக்கினார். மேற்கு வங்கத்தை ஆட்சி புரிந்து வந்த கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்தைத் தகர்த்து ஆட்சியைக் கைப்பற்றிய சாதனையாளர்.
மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வர்...
மத்திய ரயில்வே அமைச்சராக சிறப்பாக செயல்பட்டவர். பின்னர் 2011ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி முதல் முறையாக முதல்வர் பதவிக்கு உயர்ந்தார். மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வரும் இவர்தான்.
பன்முகம்...
அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், எழுத்தாளர், ஓவியர் என பலமுகம் கொண்டவர் மமதா பானர்ஜி. திருமணம் செய்து கொள்ளாமல் எளிய வாழ்வு வாழ்ந்து வரும் மமதா 61 வயதிலும் புயலென செயல்படுவதே அவரது மிகப் பெரிய பலமாகும்.
அனந்திபென் படேல்...
குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர். நரேந்திர மோடிக்குப் பிறகு அந்த மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு வந்தவர் அனந்தி பென் படேல். ஆசிரியரின் மகள். பின்னாளில் இவரும் ஆசிரியை ஆனார். இவரும், மோடியும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். கல்லூரிப் படிப்பின்போது சிறந்த தடகள வீராங்கனையாக இருந்தவர்.
ஜெயலலிதா...
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் முத்திர பதித்த வெகு சில பெண் அரசியல்வாதிகளில் ஒருவர். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்த ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டுமே. அந்த சாதனையை இந்தத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினார் ஜெயலலிதா.
விஸ்வரூபம்...
எடுத்த முடிவில் உறுதி, நினைத்ததை சாதிப்பது என பல முத்திரைகளுடன் வலம் வருபவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் சிஷ்யையாக அரசியலில் அறிமுகமாகி இன்று எம்.ஜி.ஆரையே மிஞ்சும் அளவுக்குப் போய் விட்டார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு அரசியலிலும், தமிழக மக்கள் மனதிலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது ஜெயலலிதாவின் வளர்ச்சி.