பெண் வேடமிட்டு, லாரி டிரைவர்களை மயக்கி கொள்ளையடித்த பலே கும்பல் கைது
தூத்துக்குடி: தமிழகத்தில் நான்கு வழிச்சாலையில் பெண் வேடமிட்டு கொள்ளையடித்த கும்பல் தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். மேலும் ஓருவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார், நாலாண்டின்புதூர், இடைசெவல், வில்லிசேரி பகுதி நான்கு வழிசாலைகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் பெண் வேடமணிந்த கும்பல் அப்பகுதி வழியாக செல்லும் லாரிகளை நிறுத்தி டிரைவர்களை தாக்கி பணம் பறிக்கும் சம்பவம் நடந்து வந்தது. இதுகுறித்து கோவில்பட்டி, கயத்தார், நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நள்ளிரவில் கோவில்பட்டி அருகே நான்கு வழிசாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு வில்லிசேரி பகுதியில் இருளில் மறைந்திருந்த நான்கு பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அதில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதில் அவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் ரேவன்,கோகுல் என தெரிய வந்தது.
இதில் தப்பி ஓடிய மேலும் இருவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இரவு கயத்தாறில் இருந்து கடம்பூர் செல்லும் மெயின் ரோட்டில் டிஎஸ்பி முருகவேல் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போலீஸ் வாகன்ம் வருவதை பார்த்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் ஓருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கோயம்புத்தூர் அருகே உள்ள ஓத்தக்கல் மண்டபத்தை சேர்ந்த ஜெகதீ்ஷ் என்பதும் இவர் தனது இரண்டாவது மனைவியுடன் திண்டுக்கல்லில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இந்த வழிப்பறி கும்பலுக்கு இவர்தான் தலைமை வகித்து வழி நடத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.