மீண்டும் தலையெடுக்கும் கந்துவட்டி கொடுமை: ஒட்டன்சத்திரத்தில் பெண் தற்கொலை
திண்டுக்கல் : தமிழகத்தில் கந்துவட்டியால் மீண்டும் ஒரு மரணம் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தமிழகத்தில் கந்துவட்டி மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி கந்துவட்டி கொடுமையின் காரணமாக இசக்கி முத்து என்பவர் தனது குடும்பத்தினரோடு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தது. இதனால் கந்துவட்டி மரணங்கள் குறைந்திருந்தது.
இந்நிலையில், ஒட்டன்சத்திரத்தில் கந்துவட்டி கொடுமையால் விமலாதேவி என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கு கந்துவட்டி கொடுமை தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
வள்ளிமுத்து என்பவரிடம் விமலாதேவி வாங்கிய கடனுக்காக வட்டி கட்டியும், பலமுறை கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்ததால், காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மீண்டும் கந்துவட்டி கேட்டு வள்ளிமுத்து மிரட்டியதை அடுத்து நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து விமலாதேவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை போலீஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.