வேடசந்தூர் அருகே குடிநீர் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
எரியோடு: வேடசந்தூர் அருகே குடிநீர் கோரி எ.பண்ணைப்பட்டி கிராம மக்கள் எரியோட்டில் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
எரியோடு பேரூராட்சிக்குட்பட்டது எ. பண்ணைப்பட்டி கிராமம். இப்பகுதியில் மற்ற கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த பல மாதங்களாக எ. பண்ணைப்பட்டி கிராமத்துக்கு மட்டும் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் புகார். தங்களது கிராமத்துக்கு குடிநீர் விநியோகிப்பதில் எரியோடு பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்தும் அலட்சியம் காட்டி வருவதாக கூறி பண்ணைப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து எரியோட்டில் பேரூராட்சி உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் பண்ணைப்பட்டி பொதுமக்கள் இன்று காலி குடங்களை தலையில் சுமந்தபடி பேருந்துகளை மறித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தால் திண்டுக்கல் மற்றும் கரூர் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.