இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை... குமுறும் கனிமொழி
காரைக்குடி : இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன்னும் 3 மாதங்களில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என திமுக எம்.பி., கனிமொழி பிரச்சாரத்தின் போது பேசி உள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்பதை வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக காரைக்குடியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு உதாரணம் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம். மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதை அடுத்து சிபிசிஐடிக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டு, குற்றவாளிகளை கைது செய்தனர். இதில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் அடங்குவர் என்றார்.
பின்னர் சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வைரபுரம் ஊராட்சியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பேசுகையில், இன்னும், மூன்று மாத காலத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி. அப்போது இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறினார்.
இதுவரை ஸ்டாலின் தான் இன்னும் 3 மாதங்களில் திமுக ஆட்சி அமையும் என கூறி வந்தார். தற்போது கனிமொழியும் அதை சொல்ல துவங்கி உள்ளார். அதிமுக.,வினரும் 3 மாதங்களுக்கு பின் தங்கள் ஆட்சி தொடரும் என கூறி வருகின்றனர். இதில் மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.