கதிராமங்கலத்தில் இரண்டாவது நாளாக விறகு அடுப்பில் சமைத்து பெண்கள் போராட்டம்!
கதிராமங்கலத்தில் பெண்கள் சமைல் எரிவாயுவை புறக்கணித்து, இரண்டாவது நாளாக விறகு அடுப்பில் சமைத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் சமையல் எரிவாயுவை புறக்கணித்து, பொதுமக்கள் விறகு அடுப்பில் இரண்டாவது நாளாக சமையல் செய்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம், எண்ணெய் எடுக்க விளை நிலங்களில் குழாய்களைப் பதித்தது. அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாயில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர்.
அந்தப் போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கான போலீசார் கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். அக்கிராமப் பெண்களை மிகவும் தரக்குறைவாகப் பேசினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க வேண்டும் என பொதுமக்கள் போரடடம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சமையல் எரிவாயுவை பயன்படுத்தி சமையல் செய்வதால்தானே இங்கு எரிவாயுவை எடுக்கிறீர்கள். எங்களுக்கு உங்கள் எரிவாயு வேண்டாம். நாங்கள் விறகைப் பயன்படுத்தி சமைத்துக்கொள்கிறோம் என கூறி, பொது இடத்தில் அவ்வூர் பெண்கள் கூடி விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டத்தை இரண்டாவது நாளாக நடத்தி வருகின்றனர்.
மேலும், இங்கு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போலீசார்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.