மதுவிலக்கை அமல்படுத்தவில்லை... என்னை சாக அனுமதியுங்கள்... தலைமைச்செயலகத்தில் பீதி கிளப்பிய பெண்!
சென்னை: அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தாத காரணத்தால், என்னை கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள் என தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் கலைச்செல்வி தலைமைச்செயலகத்திற்கு இன்று மனுவுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கம் பல ஆண்டுகளாக மதுவிலக்குக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இயக்கத்தின் மாநிலதலைவரான கலைச்செல்வி கடந்த 8ம் தேதி தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில் அவர், ‘கடந்த பல ஆண்டுகாலமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி தமிழக பெண் களாகிய நாங்கள் காந்தியவழியில் போரடி வருகிறோம். மதுவால் பல குடும்ப பெண்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலை மாற வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்.
இல்லையெனில் 27.01.2016 அன்று கலைச்செல்வியாகிய என்னை மதுவிலக்கிற்காக கருணை கொலை செய்ய உத்திரவிட வேண்டி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.
கலைச்செல்வியின் இந்த மனு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவர் எதிர்பார்த்தப்படி மதுவிலக்கு குறித்து அரசு எதுவும் அறிவிக்கவில்லை.
இதனால், தான் முன்னர் கூறியபடி தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதி தரும்படி வேண்டி, இன்று தலைமைச் செயலகத்திற்கு மனுவுடன் வந்தார் கலைச்செல்வி. ஆனால், அவரை உள்ளே விட போலீசார் அனுமதிக்கவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கலைச்செல்வி கூறுகையில், ‘கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி தமிழக பெண்களாகிய நாங்கள் காந்திய வழியில் போராடி வருகிறோம். மதுவால் பல குடும்ப பெண்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலை மாற வரும் 26.01.2016 குடியரசு தினத்தன்று பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் 27.01.2016 அன்று எம்.கலைச்செல்வி ஆகிய என்னை மதுவிலக்கிற்காக கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதன்படி என்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு மனு கொடுக்க வந்தேன். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டனர்' என்றார்.
மேலும், ‘மக்களின் உயிரை பற்றி கவலை படாமல் குடியைகெடுக்கும் குடியை கேவலம் வருமானத்திற்காக ஊக்கப்படுத்தும் தமிழக முதல்வரின் செயலை கண்டித்து, குடியால் வாழ்க்கையை பறி கொடுத்த தமிழக பெண்களின், ஏழை மக்களின் நலனுக்காக, அரசு மதுவிலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி , நாளை காலை 10.00 மணிக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் என்னை கருணை கொலை செய்ய வேண்டும் என உயர் நிலை மருத்துவர் (டீன்) அவர்களிடம் கோரிக்கை மனு வழங்க போகிறேன். மதுவிலக்கு இல்லையேல் எனது உயிரை மதுவிற்பனைக்காக அரசு எடுத்து கொள்ளட்டும். மதுவின் பிடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு எனது உயிரை சமர்ப்பிக்கிறேன். மது ஒழிய வேண்டும்,!மக்கள் நலம் பெற வேண்டும்! நல்லாட்சி அமைய வேண்டும்' என இவ்வாறு கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.