ஆத்தாடி.. கு. க பண்ணியே ஆகனும்.. டாக்டர்கள் கூறியதை கேட்டு எஸ். ஆன ஜோடி!
திருச்சி: ஆராயி. இந்த பெண்ணை பற்றிய செய்திதான் இது. இவர்தான் இந்த செய்தியின் ஹீரோயின்.
திருச்சிக்கு பக்கத்துல வேதியங்குடி என்னும் ஊர். இங்கு வாழ்பவர்தான் ஆராயி. கணவன் பெயர் ஆனந்தன். இருவரும் சிறந்த தம்பதிகள். இவர்கள் "சிறந்த" தம்பதிகள்தான் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர்களுக்கு 9 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதுதான்.
இதில் 4 பேருக்கு திருமணமாகி விட்டது. மீதம் 5 பேருடன் வீட்டில் வசித்து வருகிறார்கள். ஆராயி, இந்த 9 பிள்ளைகளையும் வீட்டிலேயே பெற்று எடுத்திருக்கிறார். ஆஸ்பத்திரி பக்கம் போனதுகூட கிடையாதாம். எல்லாமே நார்மல் டெலிவரிதான். இதெல்லாம் ஒரு விஷயமா என்கிறீர்களா? இனிமேல்தான் செய்தியே ஆரம்பிக்க போகுது.
உடல்நலம் பாதிப்பு
16 வருஷம் கழித்து ஆராயி இப்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பதுதான் விசேஷமே. ஆராயிக்கு வயசு 52. அதாவது 10-வது கர்ப்பம் இது. ஒருநாள் திடீரென்று ஆராயிக்கு தலைசுற்றல் வந்தது. அதனால் அவரை ஆனந்தன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிட்டு போனார். அங்கே போனதும் ஆராயிக்கு செக்-அப் ஆரம்பமானது. கடைசியில் பார்த்தால், ஆராயிக்கு உடம்பில் ரத்தம் குறைவு, ரத்த அழுத்தம், மற்றும் சர்க்கரை நோய் உள்ளதாகவும், அதனால்தான் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வந்து உடம்பு மோசமாகிவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.
கிசுகிசுத்த தம்பதி
ஒருமுறையாவது ஆஸ்பத்திரி பக்கம் வந்திருந்தால் தனக்கு என்ன உடம்பில் பிரச்சனை என்று ஆராயிக்கு தெரிந்திருக்கும். ஆனால் முதல்முறையாக வரவும், இத்தனை தொந்தரவுகள் உடம்பில் இருப்பதாக டாக்டர்கள் சொல்லிவிட்டதால் தம்பதி இருவருக்கும் பயம் வந்துவிட்டது. ஆஸ்பத்திரிக்கு வந்தா இப்படித்தான் பிரச்சனைகளை சொல்லி பயமுறுத்துவார்களோ என்று கிசுகிசுத்து கொண்டனர்.
பயந்த தம்பதி
தொடர்ந்து டாக்டர்கள் ஆராயியிடம், வருகிற 18-ம் தேதிக்கு பிரசவ தேதி என்று குறித்து கொடுத்து, புதுக்கோட்டை மருத்துவமனையில் போய் சேர்ந்து கொள்ளுமாறு கூறினர். இப்போது அடுத்த பயம் இருவருக்கும் ஆரம்பமானது. "எல்லா குழந்தைகளையும் வீட்டிலே பெத்துக்கிட்டு, 10-வது குழந்தைக்கு மட்டும் ஆஸ்பத்திரி வரணுமா" என்று யோசித்தனர். டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்துதான் ஆகணும்னு கண்டிப்பா சொல்லிவிடவும், புருஷனும், பெண்டாட்டியும் பயந்தபடியே திருதிருவென முழித்தனர்.
எங்கே என்றே தெரியவில்லை
கடைசியாக டாக்டர்கள், இருவரிடம், 'இந்த பிரசவம் முடிஞ்சதும் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கணும்' என்றனர். அவ்வளவுதான். இப்போது அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த ஜோடி சிட்டாக பறந்துவிட்டார்கள். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தவர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இருவரும் வீட்டிலும் இல்லை, ஊரிலும் இல்லை.
ஜோடியாக மிஸ்ஸிங்
மருத்துவ குழுவினர் இந்த தகவலை காவல்துறையினரிடமும், வருவாய்த்துறையினரிடமும் தெரிவித்தனர். ஆனந்தன்-ஆராயி ஜோடி தலைமறைவாகி உள்ளனர். குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள விருப்பமில்லாமல் தலைமறைவாகி விட்ட இந்த வித்தியாசமான ஜோடியை காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவகுழு என எல்லோரும் சேர்ந்து வலை வீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
குழந்தை பொறந்தா சொல்லி அனுப்புங்கப்பா.. அந்த செய்தியையும் தவறாமல் போடுகிறோம்!!!!