அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்... ஆர்டிஓ அலுவலகத்தில் பெண்கள் கூட்டம்!
பணிபுரியும் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Recommended Video
சென்னை : பணிபுரியும் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் லைசென்ஸ் வாங்க ஆர்டிஓ அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அம்மா ஸ்கூட்டர் வாங்க ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்பதால் தமிழகம் முழுவதம் ஆர்டிஓ அலுவலகங்களில் காலை முதலே கூட்டம் அலைமோதுகிறது.
தமிழக அரசு சார்பில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் பணம் அல்லது 50 சதவீதம் மானியத்துடன் இருசக்க வாகனம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24ம் தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக பெண்கள் விண்ணப்பிக்க அவகாசமும் அளிக்கப்பட்டது. இன்றுடன் அம்மா மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஸ்கூட்டர் மானியம் பெற ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்காக ஒரு வாரமாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது, அதிலும் இன்று கடைசி தினம் என்பதால் காலை முதலே பெண்கள் லைசென்ஸ் வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் வாகனத்தை பெற ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் ஒரு வங்கியில் கடன் பெறலாம். அதன் மூலம் 125 சிசி வரை உள்ள வாகனத்தை வாங்கலாம்.18-40 வயதுக்குட்பட்ட இருசக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்தை தாண்டக்கூடாது.
மிகவும் பின் தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகள், கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை தாண்டி திருமணமாகாத பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.