ஒரே நேரத்தில் சென்னை, கோவை, துபாயில் "மகளிர் தினம்" கொண்டாடி அசத்திய பெண்கள்
சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதன்முறையாக முகநூல் மூலம் இணைந்த பெண்கள் ஒரே நேரத்தில், தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் அமீரகத்தில் துபாயில் கொண்டாடி அசத்தியுள்ளனர்.
பெண்களுக்காக, பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு 'மகளிர் மட்டும்' என்னும் முகநூல் குழுமம், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் பெண்களை இணைக்கும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
பெண்களுக்கிடையிலான புது நட்புறவை ஏற்படுத்த, தங்களது தனித் திறமைகளை வெளிபடுத்த, தங்களுக்கிடையிலான கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, சமூக அக்கறையுடன் துவங்கப்பட்ட இந்தக் குழுமத்தில், தொடங்கிய ஐந்து மாதங்களுக்குள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
சின்னத்திரை - வெள்ளித்திரை நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள், புகைப்பட கலைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வணிக பிரமுகர்கள் மட்டுமின்றி எல்லா துறைகளைச் சார்ந்த பெண்களும் இக்குழுமத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றனர்,
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, முதன்முறையாக ஒரே நேரத்தில், தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் அமீரகத்தில் துபாய் போன்ற பெருநகரங்களில் தங்கள் குழும ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பாக நடத்தியுள்ளனர்.
சென்னையில் - ஷர்மிளா, கோவையில் - தீபிகா, உஷா, துபாயில் - வகிதா, பெனாசிர் ஆகியோரின் முழு முயற்சியால் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. மேலும் மஸ்கட், பெங்களூர், ஈரோடு போன்ற நகரங்களிலும் இதுபோன்று ஒன்றுகூடல் விரைவில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, இக்குழுமத்தின் நிர்வாகி வகிதா பானு கூறியதாவது: எங்கள் குழுமத்தின் 1,000 மற்றும் 5,000 உறுப்பினர்கள் சேர்ந்தபோது உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சின்னத்திரை பிரபலம் ரம்யா ராமகிருஷ்ணன் மற்றும் பாடகி 'மன்மதராசா' புகழ் மாலதி ஆகியோரின் சிறப்பு நேரலை உரையாடல் (Live Chat) நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்..
இருவரும் மிக ஆவலுடன் கலந்து கொண்டது மட்டுமின்றி, இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். இதுமட்டுமின்றி உறுப்பினர்களை ஊக்குவிக்க பெண்களின் தனித்துவத்தை வெளிபடுத்தும் வகையில் சமையல், புகைப்பட மற்றும் பல்வேறு போட்டிகளை வாரந்தோறும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.