சிக்னலை துண்டித்து நள்ளிரவில் கொள்ளை.. கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் துணிகரம்!
சேலம் அருகே நள்ளிரவில் ரயில் சிக்னலை துண்டித்து கேரள எக்ஸ்பிரஸில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்: சேலம் அருகே நள்ளிரவில் ரயில் சிக்னலை வேண்டுமென்றே துண்டித்து கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்களிடம் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், மொரப்பூர், காட்பாடி வழியாக டெல்லிக்கு தினமும் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
அப்போது நள்ளிரவு 12 மணியளவில் சேலம் அருகே மொரப்பூரை அடுத்த தொட்டம்பட்டி பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது.
சிக்னல் கிடைக்கவில்லை
சிக்னல் கிடைக்காததால் ரயில் நடுவழியிலேயே நின்றது. அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எஸ் 3 உள்பட 5 பெட்டிகளில் கொள்ளையர்கள் 5 பேர் ஏறினர். தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் இருந்து நகைகளை பறித்தனர்.
அலறல் சப்தம்
பெண்களின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். எனினும் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அடர்ந்த பகுதிகளுக்குள் சென்று ஓடி ஒளிந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
போலீஸில் புகார்
இது குறித்து தொட்டம்பட்டி ரயில் நிலைய அதிகாரிகளுக்கும், சேலம் சந்திப்பு ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படை டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிக்னலுக்கு செல்லும் வயர் துண்டிக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
கொள்ளையர்கள் துண்டிப்பு
ரயிலில் ஏறி கொள்ளைில் ஈடுபடுவதற்காக கொள்ளையர்களே ரயிலின் சிக்னல் வயரை துண்டித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் சிக்கவில்லை. நகைகளை பறிகொடுத்த பெண்கள் அவசரமாக டெல்லிக்கு செல்ல வேண்டியிருந்தால் மொரப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி புகார் கொடுக்க மறுத்தனர். இதையடுத்து 45 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. அந்த ரயிலிலேயே சென்று ரயில்வே போலீசார் பெண்களிடம் புகாரை பெற்றுக் கொண்டனர்.