250 மீன் கடைகளை போலீஸ் எரிச்சுது… கேட்ட எங்களையும் அடிச்சாங்க.. கதறும் மீனவப் பெண்கள்
சென்னை திருவல்லிக்கேணி நடுகுப்பத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட மீன் கடைகள் கொண்ட மார்க்கெட்டை போலீசார் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
சென்னை: ஒளிந்து கொண்டிருக்கும் யாரையோ பிடிக்கிறோம் என்று சொல்லி வெட்ட வெளியில் உள்ள மீன் மார்க்கெட்டை நொறுக்கி தீ வைத்து கொளுத்தியது போலீஸ். அதனை எதிர்த்து கேட்டவர்களை புடவையை பிடித்து இழுத்து போலீசார் அசிங்கமாக நடந்து கொண்டதாக மீனவப் பெண்கள் கதறி அழுகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளான திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் நேற்று வன்முறை வெடித்தது. இதில் போலீசார் ஒளிந்து கொண்டிருப்பவர்களை பிடிக்க பிடிக்கப்போகிறோம் என்று கூறி நடுகுப்பம் மீன் மார்க்கெட் உள்ள பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டு கதவையும் உடைத்து அங்குள்ள பெண்களை அவமானம் செய்துள்ளனர்.
நடுகுப்பத்தில் இருந்து 250 மீன் கடைகள், 3 கருவாட்டுக் கடை, 3 காய்கறிக் கடை என அனைத்தையும் தீ வைத்து போலீசார் கொளுத்தியுள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அங்கிருந்து இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ என எதையும் விட்டு வைக்க போலீசார் என்று குமுறுகின்றனர் பெண்கள்.
மயானமான மீன் மார்க்கெட்
நடுகுப்பத்தில் இருந்த அனைத்துக் கடைகளும் தீக்கிரையாகிக் கிடக்கின்றன. "இந்த இடத்தில் மீன் விற்கும் பெண்கள் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். கணவனை இழந்தவர்கள், கணவன் இருந்தும் சரியாக குடும்பத்தை கவனிக்காதவர்களின் மனைவிகள் இப்படி ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தான் இந்த இடத்தில் மீன் கடை போட்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கடைகளை எரித்தால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு நாங்கள் என்ன செய்து என்று கேள்வி எழுப்புகிறார் மீன் விற்பனையாளர் லட்சுமி.
பெண்கள் மீது தாக்குதல்
நடுகுப்பத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் கதவையும் போலீசார் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெண்களை கெட்ட வார்த்தையால் திட்டி அவமானம் செய்ததாக இங்குள்ள பெண்கள் கதறி அழுகின்றனர். வீட்டில் இருந்த பெண்களையும் போலீசார் அடித்து உதைத்துள்ளனர். இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நொறுக்கப்பட்ட டிவி
வீட்டின் கதவை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர்களின் வீடுகளைக் கூட போலீசார் விட்டு வைக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே நுழைந்து டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை உடைத்து நாசம் செய்துள்ளனர் போலீசார். நேற்றிலிருந்து இந்த நிமிடம் வரை இன்னும் சோறு தண்ணீர் சாப்பிடாமல் ரோட்டிலேயே நின்று கொண்டிருக்கிறோம் என்று குமுறுகிறார் வெண்ணிலா.
சோத்துக்கு வழி என்ன?
அந்தப் பகுதியில் இருந்த கார், ஆட்டோக்கள், வேன் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை போலீசார். எரிந்து போன வாகனங்களின் எலும்புக் கூடுகள் மட்டுமே காட்சிப் பொருள் போல் அப்பகுதியில் நின்று கொண்டிருக்கின்றன. "யார் தவறு செய்தார்களோ அவர்களை பிடிக்காமல் வீட்டிற்குள் இருக்கும் பெண்களை துன்புறுத்துவது, அடிப்பது, குழந்தைகளை அடிப்பது என்ற அராஜக செயலை போலீசார் செய்துள்ளனர். இதற்கு எங்களுக்கு தக்க நியாயம் வழங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.