டாஸ்மாக் கடையை மூடு.. அதிகாரிகளுடன் ஆக்ரோஷம் காட்டிய பெண்.. நெல்லையில் பரபரப்பு
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தில் அதிகாரிகளுடன் பெண் ஆவேசமாக பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் பெண் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே பனவடலிசத்திரம் பகுதியில் சாயமலை என்ற இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகே குடிநீர் தொட்டி மற்றும் ரேஷன் கடையும் இருக்கிறது.
இந்நிலையில், தொட்டி தண்ணீர் பிடிக்க வரும் பெண்களை குடிமகன்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் சாயமலை டாஸ்மாக் கடையை மூட கோரி எதிர்ப்பு தெரிவித்தனர். கை குழந்தையுடன் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தை பெண்கள் துவங்கினர். மாலை 5 மணிக்கு துவங்கிய போராட்டம் இரவு 10 மணி வரை நீண்டது. இதனால் விரைந்து வந்த சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன், திருவேங்கடம் தாசில்தார் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் தர்ணா செய்த பெண்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
அதன்படி, திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது பெண் ஒருவர் சாயமலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவிட்டால் தீக்குளிப்பேன் என அதிகாரிகளிடம் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை சமாதானப்படுத்திய நெல்லை மாவட்ட ஐயப்பன், தாசில்தார் ராசு பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை விரைவில் மாற்றப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் இரவில் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.