தண்ணீர்.. தண்ணீர்.. காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.. விழுப்புரத்தில் போக்குவரத்து பாதிப்பு
தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாததால் பெண்கள் விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
விழுப்புரம்: கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாமல் தமிழகத்தின் முக்கிய ஏரிகள் அனைத்து காய்ந்து கிடக்கின்றன. கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பஞ்சம் தமிழக மக்களை தற்போது பாடாய் படுத்தி வருகிறது.
இதனால் பொதுமக்கள் காலிக் குடங்களோடு சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காத மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.
சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தக்குடி கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் கோபம் அடைந்த பெண்கள் காலிக் குடங்களுடன் கள்ளக்குறிச்சி-வேம்பூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் வந்து ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. போராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
காலிக் குடங்களுடன்...
இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் பெரம்பூரில் பகுதியில் ஒன்று கூடிய மக்கள் குடிநீர் கேட்டு தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினார்கள்.
மறியல்
சென்னையை அடுத்த திருவள்ளுர் மாவட்டத்திலும் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் சரியாக இல்லை. இதனால் இன்று திருவள்ளூர் மாவட்டம் கிராண்ட்லைன் ஊராட்சி மக்கள் காலிக்குடங்களுடன் மறியல் செய்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.