குழந்தை வரம் வேண்டி.. கைகளைப் பின்பக்கமாக கட்டி வாயால் கவ்வி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள பிரபலமான பரதேசி ஆறுமுகசாமி கோவிலில் நடந்த ஆடி அமாவாசை விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குழந்தை வரம் வேண்டி பெண்கள் கலந்து கொண்ட மண் சோறு சாப்பிடும் வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற்றது.
மற்ற கோவில்களில் நடைபெறும் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சிக்கும், கோட்டுப்பாக்கம் கோவிலில் நடைபெறும் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
இங்கு பெண்கள் அமர்ந்து மண் சோறு சாப்பிட மாட்டார்கள். மாறாக முட்டி போட்டு, கைகளைப் பின்பக்கமாக கட்டிக் கொண்டு வாயால் கவ்வித்தான் சாப்பிடுவார்கள். இதில் பிள்ளைப் பேறுக்காக ஏங்கிக் காத்திருக்கும் பெண்கள் பெரும் திரளாக கலந்து கொள்வது வாடிக்கையாகும்.
திருவண்ணாமலை அருகே
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ளது கோட்டுப்பாக்கம் கிராமம். இங்கு வசித்து வந்த சித்தர்தான் பரதேசி ஆறுமுகசாமி. இவருடைய ஆலயம் இங்கு உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையையொட்டி குருபூஜை விழா நடைபெறும். அதன்படி 179-ம் ஆண்டாக குருபூஜை விழா மற்றும் ஆடி அமாவாசை விழா நேற்று நடந்தது.
பொங்கல் வைத்துப் படையல்
விழாவை முன்னிட்டு கோவில் முன்பு சன்மார்க்க சங்க கொடியேற்றி வனதேவதையான பொன்னியம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து படையல் செய்தனர். பின்னர் பரததேசி ஆறுமுகசாமி சிவலிங்கத்திற்கு பால், தயிர், பன்னீர், இளநீரால் அபிஷேகம் செய்து தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. கோவில் முன்பு பக்தர்கள் பரதேசி ஆறுமுகசாமி சிவலிங்கத்திற்கு குருபூஜை செய்தனர்.
பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி
தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகள் எடுத்து வந்தனர். அவர்கள் கோவிலை சுற்றி வந்து பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் மகா யாகம் நடந்தது.
மண் சோறு சாப்பிடல்
இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான மண் சோறு சாப்பிடும் வைபவம் நடந்தது. குழந்தை வரம் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இவர்கள் விரதம் இருந்து இந்த மண் சோறு சாப்பிடும் வைபவத்தில் பங்கேற்பார்கள்.
சிவனடியார்கள் வழங்கிய பிரசாதம்
மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் யாககுண்டம் எதிரில் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களுக்கு, குருபூஜை செய்யப்பட்ட பிரசாதத்தை சிவனடியார்கள் வழங்கினர். அதை, பெண்கள் தங்கள் புடவை முந்தானையில் பெற்றுக்கொண்டு கோவில் அருகில் உள்ள குளத்திற்கு சென்றனர்.
மண்டியிட்டு கவ்வி சாப்பிட்டனர்
அங்கு குளத்தின் படிக்கட்டுகளில் பிரசாதத்தை வைத்து, மண்டியிட்டு, கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு, படிக்கட்டுகளில் வைத்திருந்த பிரசாதத்தை வாயால் கவ்வி சாப்பிட்டனர். பின்னர் தாங்கள் அணிந்திருந்த பூமாலையை குளத்தில் போட்டுவிட்டு சென்றனர்.
ஏராளமான பெண்கள்
இந்த மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
எடைக்கு எடை நாணயம்
இங்கு வந்து வழிபட்டு மண் சோறு சாப்பிட்ட பின்னர் குழந்தை வரம் கிடைக்கப் பெற்ற பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்து, குழந்தையின் எடைக்கு எடை நாணயம் வழங்கியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நன்றி: மேலச்சேரி கோட்டுப்பாக்கம் பேஸ்புக்