39 லோக்சபா தொகுதிகளில் 22 தொகுதிகள் பெண்களின் கையில்...!
சென்னை: தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 22 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
தலைநகர் சென்னை முதல் பல முக்கியத் தொகுதிகளில் பெண்களே அதிகம் உள்ளனர்.
எனவே தமிழகத்தில் அதிக அளவிலான எம்.பிக்களைத் தேர்வு செய்வதில் இந்தமுறையும் பெண்களே முக்கியப் பங்கு வகிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் பெண் வாக்காளர்கள்
தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2009ம் ஆண்டுக்குப் பிறகு கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த தேர்தலில் 15 தொகுதிகள்
கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் 15 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்தனர்.
தெற்கத்தி பெண்கள்
இந்த 15 தொகுதிகளில் பெரும்பாலானாவை தென் மாவட்டங்களைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை டூ தூத்துக்குடி
மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியவை இந்த 15 தொகுதிகளில் அடக்கமாகும்.
போட்டி போடும் வடக்கு
இந்த முறை அதிக பெண் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் வரிசையில் தென் மாவட்டங்களுக்குப் போட்டியாக வட தமிழகம் உருவெடுத்துள்ளது.
வடக்கில் 6 தொகுதிகளில் பெண்கள் அதிகம்
சென்னை வடக்கு, காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி ஆகிய தொகுதிகளில் பெண் வாக்கார்கள் அதிகம் உள்ளனர். கடந்த முறை அதிக பெண் வாக்காளர்களைக் கொண்ட 15 தொகுதிகளில் அரக்கோணம், வேலூர் ஆகியவை மட்டுமே இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிலிருந்து 4 தொகுதிகள்
2009 தேர்தலில் மேற்கு மண்டலத் தொகுதிகள் எதிலுமே பெண்கள் அதிகம் இல்லை. ஆனால் இந்த முறை நாமக்கல், ஈரோடு, பொள்ளாச்சி, நீலகிரி என நான்கு தொகுதிகள் வந்துள்ளன.
மொத்தம் 22 தொகுதிகள்
கடந்த தேர்தலில் 15 தொகுதிகளில்தான் அதிக பெண் வாக்காளர்கள் இருந்தனர். இந்த முறை 22 தொகுதிகளாக அது உயர்ந்துள்ளது. இது பெண் வாக்காளர்கள் வசம் வெற்றி நிர்ணயம் போய்க் கொண்டிருப்பதை உணர்த்துகிறது.
திமுகவுக்குச் சாதகம்?
கடந்த 2009 தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்த 15 தொகுதிகளில், ஐந்து தொகுதிகளில்தான் பெண் வாக்காளர்கள் ஆண்களை விட அதிக அளவில் வாக்களித்திருந்தனர். இந்த ஐந்திலுமே திமுகதான் வென்றிருந்தது என்பது சுவாரஸ்யமானது.
திமுக வென்றவை இவைதான்...!
பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம் ஆகியவையே அந்தத் தொகுதிகள். திமுக கூட்டணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 27 தொகுதிகளைக் கைப்பற்றியது. அப்போது மாநிலத்தில் திமுக ஆட்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.