குடிக்கத் தண்ணீர் இல்லை.. மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியனை குடத்துடன் முற்றுகையிட்ட பெண்கள்
தூத்துக்குடி: குடிநீர் கேட்டு தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியனை பெண்கள் முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியின் 3வது வார்டு பகுதிகளான ராஜீவ் நகர், ராஜகோபால் நகர், ஹவுசிங் போர்டு காலனி, புஷ்பாநகர், காந்தி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பு பகுதிகளில் 3ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்களுக்கு கடந்த 2மாத காலமாக குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் கோகிலா மற்றும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செல்லபாண்டியனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இருந்தபோதும் பயனில்லாததால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட பெண்கள் சுமார் 250க்கும் மேற்ப்பட்டவர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநேரத்தில் தமிழக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான செல்லபாண்டியன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதனைக்கண்ட பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பாண்டியனை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களிடம் பேசிய செல்லபாண்டியன் குடிநீர் முறையாக விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறியதையடுத்து முற்றுகையிட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். அதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் செல்லபாண்டியன் ஆளைவிட்டால் போதும் என்ற ரீதியில் காரில் ஏறி எஸ்கேப் ஆனார். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.